Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லி, தோசை விலை மிகவும் உயர்ந்து விட்டது-அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி தந்தாலும் இட்லி, தோசை, சாப்பாடு விலை மிகவும் உயர்ந்துவிட்டதாக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டினார்.

சட்டசபையில் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் ஆள்பவர்களைப் பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள். ஆளும் இடத்தில் இருப்பவர்களிடம் தன்னலம் இருக்கக் கூடாது. இன்று குடும்ப ஆதிக்கம், அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல், அமைச்சர்கள் மீதே வழக்கு, கட்டப் பஞ்சாயத்து என்ற நிலை உள்ளது. நான் யாருடைய குடும்பத்தையும் குறிப்பிடவில்லை.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: குடும்ப ஆதிக்கம் என்று பேசினார். எங்களுக்கு குடும்பம் உள்ளது.

ஜெயராமன்: எங்களுக்கும் குடும்பம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. கடுமையான மின்வெட்டினால் இருண்டு கிடக்கும் தமிழகத்துக்கு விளக்கேற்ற வாருங்கள் அம்மா என்று அழைக்கிறேன். ஆட்சி சிறப்பாக நடக்க நிர்வாக சீர்திருத்தம் தேவை. நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்துக்கு ஜீவநாடியாக விளங்கியவர் அம்மா. 2002ம் ஆண்டு இந்திய உணவுக் கழகத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டதால், தற்போது தமிழகத்துக்கு தேவையான உணவுப் பொருள், அரிசி, அனைத்தும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இது அவருடைய நிர்வாக சீர்திருத்தம்.

2001ம் ஆண்டு அம்மா பொறுப்பேற்ற போது தமிழகத்தின் விற்பனை வரியின் மூலம் ரூ.8,000 கோடி வருமானம் வந்தது. 2006ம் ஆண்டு அவர் ஆட்சிப் பொறுப்பை விட்டு போகும்போது ரூ.18,000 கோடியாக அது அதிகரித்து இருந்தது.

அமைச்சர் உபயதுல்லா: அவைக்கு ஜெயராமன் தவறான தகவலை தருகிறார். அது ரூ. 18,000 கோடியல்ல. ரூ.16, 615 கோடிதான். இன்று அது ரூ.25,000 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெயராமன்: மது விற்பனையில் தனியாருக்கு கொள்ளை லாபம் கிடைத்த நிலையில் அதை டாஸ்மாக்கிற்கு மாற்றியது, மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு வருவாயை ஈட்டியது, லாட்டரியை ஒழித்து தொழிலாளர்களை காப்பாற்றியது போன்ற நடவடிக்கைகள், அம்மாவின் நிர்வாகச் சீர்திருத்தத்துக்கு நான் காட்டும் சில உதாரணங்கள்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கொப்பரை தேங்காய் விலை அதலபாதாளத்துக்கு போய்விடுகிறது. பொள்ளாச்சிப் பகுதியில் இருக்கிற ஒரே விவசாயம் தேங்காய் விவசாயம்தான். இன்றைக்கு அங்கே கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. தேங்காய் இன்றைக்கு வெளிச்சந்தையில் ரூ.3.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எப்படி வாழ முடியும்?

ஒரு கிலோ தேங்காயை ரூ.12-க்கு தமிழக அரசின் டான்பெட் நிறுவனம் கொள்முதல் செய்யலாம் என்று அறிவித்து, ஒரு மாதமாகியும் இதுவரை அதற்கான வழிவகைகளை அரசு செய்யவில்லை என்பது வேதனை. இதனால் தென்னை விவசாயிகள் அனைவரும் போராடும் நிலைக்கு வந்துள்ளனர்.

அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி: டான்பெட் மூலம் கடந்த 15 நாட்களாக கோவை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஜெயராமன்: எங்கேயாவது ஒரு தேங்காயாவது கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் நான் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளத் தயார். மார்ச் 16ம் தேதியோடு பொள்ளாச்சியில் கொள்முதல் நிறுத்தப்பட்டு விட்டது. வரும்போது கேட்டுவிட்டுதான் வந்தேன்.

2001ம் ஆண்டுக்கு முன்பாக கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. அதில் பலகோடி ஊழல் நடந்தது. பின்னர் லஞ்ச ஒழிப்பு மூலம் விசாரணை செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் 47 வழக்குகள் சந்தேகத்துக்கு இடமின்று நிரூபணம் ஆகியுள்ளது. குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்ட பிறகு, ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாகச் சொல்லி, ஹைகோர்ட்டு வரை சென்று வந்த வழக்கு எந்தவித காரணமுமின்றி கைவிடப்பட்டதாக பத்திரிகையில் படித்தேன். நீதிதேவன் உறங்கப் போய்விட்டானா? இனி எழவே மாட்டானா? அமைச்சராக இருந்தபோது அதற்கான கோப்புகளில் நானும் கையெழுத்திட்டேன்.

அம்மா ஆட்சியில் உணவு மானியத்துக்காக ரூ.1,800 கோடி செலவு செய்து, 32 லட்சம் டன் அரிசியை மக்கள் சாப்பிட்டார்கள். இன்று ரூ.4,000 கோடி செலவு செய்து, 36 லட்சம் டன் அரிசிதான் மக்களுக்கு போகிறது. பாதிக்கு மேல் அரிசி கடத்தப்படுகிறது. அது கைத் தொழிலாக மாறிவிட்டது. தூத்துக்குடிதான் அரிசி கடத்தலுக்கு தலைமையிடமாக இருக்கிறது. அடுத்தது பொள்ளாச்சி. பிடித்துத் தர நாங்கள் தயார்.

ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி தந்தாலும் தமிழகத்தில் இட்லி, தோசை, சாப்பாடு விலை எங்கோ போய்விட்டது. கிராமத்தில் 2 இட்லி விலை ரூ.10, தோசை விலை ரூ.12, நகர்ப்புறங்களில் 2 இட்லி ரூ.15, தோசை ரூ.20, சென்னையில் 2 இட்லி ரூ.20, தோசை ரூ.25. பொள்ளாச்சியில் சாப்பாடு விலை ரூ.35. கோவையில் ரூ.45. சென்னையில் சாதாரண ஹோட்டலில் ரூ.60. காபி, டீ விலையும் கூடிவிட்டது என்றார் ஜெயராமன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+