பாரத் பந்த்: மதிமுக-இடதுசாரி தலைவர்களுடன் ஜெ சந்திப்பு

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, மகேந்திரன் எம்.எல்.ஏ, பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர் கதிரவன் பொருளாளர் மகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டணிக் கட்சிகளாக இருந்தபோது கூட ஜெயலலிதாவை சந்திக்கவே முடியாத நிலையில் தான் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இருந்தனர். ஜெயலலிதாவை சந்திக்கும் இடத்தில் அவர் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பலமுறை கூறியுள்ளார்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கு கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்றும் பாண்டியன் கூறினார். அதே நேரத்தில் இப்போது அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை.
இருந்தாலும் மத்திய அரசை எதிர்த்து வரும் 27ம் தேதி நடக்கவுள்ள பந்த்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து இடதுசாரிகள் மற்றும் மதிமுக தலைவர்களுடன் இன்று ஜெயலலிதா விவாதித்தார்.
விலைவாசி உயர்வை எதிர்த்தும், பட்ஜெட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வருவது குறித்தும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி ஜனதா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அதிமுக உள்பட 13 கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 12ம் தேதி நடைபெற்றது.
அதில் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் இந்த பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இச் சந்திப்பின்போது அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன், கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை ஆகியோரும் உடனிருந்தனர்.
பென்னாகரம் இடைத் தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் தான் இந்தக் கட்சிகளை ஜெயலலிதா அழைத்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை சென்ற ஜெ:
இக் கூட்டத்துப் பின் ஜெயலலிதா மதுரை கிளம்பிச் சென்றார்.
விபத்தில் காயமடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அவர் மதுரை சென்றார்.
தேனியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பிய அதிமுக தொண்டர்கள் மீது லாரி மோதியதில் பலர் காயமடைந்தனர்.
இவர்கள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் பிரீத்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் ஜெயலலிதா மதுரை சென்றார்.
இதுவும் ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட திடீர் நல்ல மாற்றமே என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டர்களை நேரில் சந்தித்து ஜெயலலிதா ஆறுதல் கூறும் ஜெயலலிதா மாலையே சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications