முல்லைப் பெரியாறு தொடர்பான ஐவர் குழுவில் தமிழகம் பங்கேற்கிறது – ஏ.ஆர்.லட்சுமணன் இடம் பெறுவார்
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச், இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஐவர் குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இதில் தமிழகம், கேரளம் மற்றும் மத்திய அரசின் சார்பில் பிரதிநிதிகள் இடம் பெறுவர். இக்குழுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
தமிழகம் கேரளம் சார்பில் தலா ஒருவரும், மத்திய அரசின் சார்பில் இருவரும் இடம் பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால் இதை ஏற்க மறுத்த திமுக, இது தேவையில்லாதது, உச்சநீதிமன்றம் தனது கடமையைத் தட்டிக் கழிக்கப் பார்க்கிறது என்று கூறி குழுவில் இடம் பெறுவதில்லை என்று முடிவு செய்தது. இதை நிலையை அரசும் எடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலிலேயே ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசைக் கண்டித்தது.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், முல்லை பெரியாறு ஐவர் குழு கமிட்டியில் தமிழக அரசு இடம் பெறும். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக குழுவில் இடம் பெறுவார் என அறிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் அதிகாரம் கொண்ட குழுவினை அமைத்து, உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆணையிட்டதுய இந்த குழுவில் தமிழக அரசின் சார்பில் ஒரு உறுப்பினரை நியமனம் செய்யுமாறு மத்திய அரசு கடிதம் எழுதியது.
இப்பிரச்சனையில் அனைத்து அம்சங்களும் உச்சநீதிமன்றத்தினால் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்ட நிலையில், புதிதாக இன்னொரு குழுவை அமைக்க தேவையில்லை என கருதி இந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமிழக அரசு சார்பில் குழு உறுப்பினரை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு மீண்டும் வலியுறுத்திது.
இப்பிரச்சனை குறித்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்த கருத்துக்களை கேட்டும் முல்லை பெரியாறு குறித்த வழக்கு முடிவுதான் தமிழகத்துக்கு முக்கியம் என்ற நோக்கத்தோடும், உச்சநீதிமன்றம் அறிவித்த குழுவிலே தமிழக அரசின் சார்பில் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
ஏற்கனவே கேரளாவின் சார்பில் இடம் பெறும் பிரதிநிதியாக கே.டி.தாமஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.