துறைமுகம்-மதுரவாயல் விரைவு சாலை திட்டம்-வைகோ எதிர்ப்பு
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க துறைமுகம்- மதுரவாயல் இடையே இந்த மேமபால விரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.
கூவம் ஆற்றின் மேல் அமையும் இந்த சாலைக்காக ஆற்றோர குடிசைப் பகுதிகள் அகற்றப்படவுள்ளன.
இதனால் தங்கள் வீடுகளை இழக்கும் நிலை உள்ளதாகக் கூறி இத் திட்டத்துக்கு குடிசைப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் வைகோ இன்று காலை அண்ணாநகர் நடுவங்கரை, எம்.ஜி.ஆர். காலனி, பாரதிநகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதி மக்களை சந்தித்தார். அப்போது இந்த இடத்தை விட்டு நாங்கள் காலி செய்ய மாட்டோம் என்று அப் பகுதியினர் கூறினர்.
அவர்கள் மத்தியில் பேசிய வைகோ,
40 ஆண்டு காலமாக இந்த பகுதியில் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட குடிசை பகுதியாகும். இங்கு நிரந்தரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையில் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு வீடுகளை கட்டியிருக்கிறார்கள்.
இங்குள்ள மக்களை வேறு எங்கோ குடி அமர்த்துவது என்பது அரசின் ஏமாற்று வேலை. அவர்கள் இந்த பகுதியிலேயே கட்டிட வேலை, வீட்டு வேலை, சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
அவர்களை அப்புறப்படுத்தினால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். மனிதாபிமானமற்ற முறையில் மக்களை வெளியேற்றப் பார்க்கிறார்கள். இவர்களை அகற்றிவிட்டு உல்லாசப் பூங்கா, கேளிக்கை வசதி போன்றவற்றுக்கு பயன்படுத்த உள்ளார்கள்.
போக்குவரத்தை சீர்படுத்த இவர்களை அகற்றுகிறோம் என்பதை ஏற்க முடியாது. நெரிசல் மிக்க சாலைகளில் 10 மாடி 20 மாடி என கட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள்.
நெரிசலைக் குறைக்க அதற்கு மறுப்பு தெரிவிக்கலாமே.
போக்கு வரத்து நெரிசலுக்கு அரசுதான் காரணம். எனவே இங்கு வசிக்கிற மக்களை அப்புறப்படுத்தக் கூடாது. அரசியல் நோக்கத்திற்காக இங்கு வந்து நான் பேசவில்லை. எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஏழைகள் நாதியற்று போகக் கூடாது என்பதற்காக இந்த பிரச்சனையில் தலையிட்டு போராடுவேன்.
இந்த மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர்களை வெளியேற்றுகிறார்கள். இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தால் மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவேன்.
இந்த மேம்பால சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
ஏழை, எளிய மக்களை சீரழித்துவிட்டு சிங்கார சென்னை வேண்டாம் என்றார் வைகோ.