கனடா 3 டி நிறுவனத்தை வாங்கிய கூகுள்!
டொரண்டோ: கனடா நாட்டின் பிரபலமான 3 டி தொழில்நுட்ப நிறுவனம் 'பம்ப் டாப்'பை விலைக்கு வாங்கியது கூகுள் நிறுவனம். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் போட்டியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது கூகுள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பம்ப் டாப் நிறுவனம் உருவானது. 3 டி தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ளது இந்த நிறுவனம். டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை இந்த நிறுவனம் ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு விரல் மூலம் மட்டுமே தொடு திரையில் ஆணைகள் பிறப்பிக்கலாம். ஆனால் இந்த நிறுவனம், ஒரே நேரத்தில் ஒரு தொடு திரையில் பல விரல்களால் பல ஆணைகள் பிறப்பிக்கும் வகையில் சாப்ட்வேர் வடிவமைத்தது.
இது முப்பரிமாண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோருக்கு பெரும் உதவியாக அமைந்தது.
இந்த நிறுவனத்தைத்தான் கூகுள் வாங்கியுள்ளது. என்ன விலைக்கு வாங்கியது, இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிளுக்கு எதிராக எப்படி பிரயோகிக்கப் போகிறது என்பது குறித்து எந்த விபரமும் வெளியிடவில்லை கூகுள்.
ஆனாலும் கூகுளின் ஸ்மார்ட் போன்களில் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடும் என்று தெரிகிறது. மேலும் விரைவில் அறிமுகமாகவுள்ள கூகுளின் புதிய ரக கம்ப்யூட்டர் மற்றும் போன்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படக்கூடும்.
ஆப்பிளைச் சமாளிக்க கூகுள் கைப்பற்றும் 5வது சாப்ட்வேர் நிறுவனம் இது. கடந்த வாரம்தான் 'லாப் பிக்ஸிஸ்' எனும் மொபைல் போன் கேம்ஸ் நிறுவனத்தை வாங்கியது கூகுள். ஏற்கெனவே அக்னிலக்ஸ், ப்ளிங்க் மற்றும் எபிஸோடிக் ஆகிய நிறுவனங்களையும் வாங்கியது கூகுள்.