மே.வங்க காங். செயல் தலைவர் சுப்ரதா முகர்ஜி திரினமூலுக்குத் தாவல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சிக்கு நேற்று பலத்த சரிவு ஏற்பட்டது. அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரதா முகர்ஜி, மீண்டும் திரினமூல் காங்கிரஸில் சேரப் போவதாக அறிவித்தார்.
ஏற்கனவே திரினமூல் காங்கிரஸில் இருந்தவர்தான் சுப்ரதா. ஆனால் மமதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மீண்டும் காங்கிரஸுக்குத் தாவினார். செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் திரினமூல் காங்கிரஸுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார் சுப்ரதா.
இதுகுறித்து அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் திரினமூல் காங்கிரஸ் கட்சியுடன் இருந்து வந்த கூட்டணி முறிவதற்கு காங்கிரஸ் கட்சியின் அலட்சியப் போக்கே காரணம். மேலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தையும் காங்கிரஸ் சரிவர செய்யவில்லை. காங்கிரஸால் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட முடியாது.
மமதா பானர்ஜியைப் புறக்கணித்து விட்டு யாராலும் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாது. மாவோயிஸ்டுகளின் பிடியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியை அகற்ற திரினமூல் காங்கிரஸும், காங்கிரஸும் பிரியாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் அதை காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடையக் காரணமே காங்கிரஸ்தான். அப்படிப்பட்ட கட்சியில் இருக்க விரும்பவில்லை என்றார் சுப்ரதா.
ஏற்கனவே கொல்கத்தா மேயராக சுப்ரதாவை ஆக்கியவர் மமதா. தற்போது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சுப்ரதா கட்சி தாவியுள்ளதால் மீண்டும் அவரை மேயராக்கும் திட்டம் திரினமூலிடம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications