கூடுதல் கட்டணம்-தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
சட்டசபையில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், பள்ளி கட்டணத்தை வசூலிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கயிருப்பதால் அந்த அறிக்கை எப்போது தாக்கலாகும் என்று கேடடார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
தமிழ்நாட்டில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து அதை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக 2009ம் ஆண்டு கல்வி கட்டண வரைமுறை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒவ்வொரு பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து 15க்கும் அதிகமாக முறை கூடி விவாதித்துள்ளது.
கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு முன் மாணவர்களை சேர்க்க கூடாது என்று கடந்த நவம்பர் 23ம் தேதி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் கட்டணம் வாங்காமல் மாணவர்களை சேர்த்துக் கொள்கிறோம். எவ்வளவு மாணவர்களை இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் தான் அதற்கேற்ற வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்று பள்ளிகள் தரப்பில் கூறியதால் பிப்ரவரி மாதம் கட்டணம் வாங்காமல் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தமிழக அரசின் கல்வி கட்டண வரைமுறை சட்டம் செல்லும் என்று ஏப்ரல் 9ம் தேதி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 10,951 சுயநிதி பள்ளிகள் உள்ளன. எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்னும் 4,5 தினங்களில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது பற்றிய கருத்துக்களை கேட்ட போது 10,233 பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கட்டண விவரத்தை அனுப்பியுள்ளன. 700 பள்ளிகள் அந்த விவரத்தை அனுப்பவில்லை. கட்டண விவரம் பற்றி தமிழக அரசு அறிக்கை அனுப்பிய பின் பள்ளிகள் அந்த கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தால் அல்லது புகார் வந்தால் அது பற்றி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications