விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீடித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீட்டிப்புக்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. போர் முடிந்து விட்டது, பிரபாகரன் உள்ளிட்ட அனைத்துப் புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்று கடந்த ஆண்டு மே 18ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.
இருப்பினும் பிரபாகரன், பொட்டு அம்மான் மரணங்கள் தொடர்பாக தொடர்ந்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கேற்றபடி இந்த இருவரின் மரணச் சான்றிதழ்களையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவிடம் அளிக்காமல் உள்ளது.
இலங்கையில் போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் கடந்த 1992ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.












Click it and Unblock the Notifications