கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்-ஆந்திர வாலிபர் கைது
சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டு 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்றிரவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதுரை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருவர் கையில் பார்சலுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் விசாரிக்க முயன்றபோது தப்பியோடினர். இதில் பார்சலுடன் இருந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் தப்பிவிட்டார்.
அந்த நபர் வைத்திருந்த பார்சலை சோதனையிட்டபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், அவரது பெயர் கர்ணா பாபு (30) என்றும் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
தப்பியோடிய அப்பாராவ் என்பவருடன் 30 கிலோ கஞ்சாவுடன் சென்னை வந்த இவர் அதை மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். கர்ணாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அப்பாராவைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.