விமான விபத்து - பிரதமர், சோனியா அதிர்ச்சி - எதியூரப்பா மங்களூர் விரைகிறார்
மங்களூர்: மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 160 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, கர்நாடக முதல்வர் எதியூரப்பா அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து பிரதமர் தெரிவிக்கையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலுடன் பேசினேன். பிரபுல் படேல் மங்களூர் விரைகிறார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதியும் அளிக்கப்படும் என்றார்.
காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியும், இந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்துள்ளோர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறுகையில், இதுமிகப் பெரிய சோகச் சம்பவம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விமானத்தில் 160 பேர் இருந்ததாக தெரிகிறது. நான் ஹெலிகாப்டர் மூலம் மங்களூர் செல்கிறேன்.
விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் வந்துள்ளன என்றார்.
மங்களூரில் பிரபுல் படேல்
இதற்கிடையே, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல், விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட அவர் விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications