மங்களூர் விமான விபத்து - ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி சிக்கியது

துபாயிலிருந்து நேற்று காலை மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX-812) விமானம் பாஜ்பே விமான நிலையத்தில் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி ரன்வேயைத் தாண்டி ஓடி, பள்ளத்தாக்கில் விழுந்து, இரண்டாக உடைந்து வெடித்துச் சிதறியது. இந்தக் கோர விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உயிருடன் தப்பினர்.
விபத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து கருகிப் போய் விட்ட உடல்களை மீட்டனர். நேற்று மாலையில் 158 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு விட்டன.
அதன் பின்னர் அவற்றை அடையாளும் காணும் பணிகள் நடந்தன. இதில் 36 உடல்களைத் தவிர மற்றவர்களின் அடையாளம் காணப்பட்டு விட்டது. இவர்களின் உடல்களில் டிஎன்ஏ சோதனை நடத்தி உடலை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
உடல்களை அடையாளம் காணும் பணிக்காக ஹைதராபாத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் மங்களூரில் முகாமிட்டுள்ளனர். இறந்தவர்களின் கை ரேகைகளை அவர்கள் பதிவு செய்து அதன் மூலம் உடல்களை அடையாளம் கண்டு வருகின்றனர். இறந்தவர்களில் 23 பேர் கைக்குழந்தைகள் மற்றும் சிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கருப்புப் பெட்டி சிக்கியது
விபத்துக்கான காரணத்தை அறிய உதவும் கருப்பு்ப பெட்டியை தேடுதல் படையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று முற்பகல் வாக்கில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
கருப்புப் பெட்டியை மும்பை அல்லது பெங்களூருக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கருப்புப் பெட்டியில், பதிவாகியுள்ள தகவல்களை வைத்து விபத்து நடந்ததற்கான காரணத்தை துல்லியமாக அறிய முடியும். காக்பிட்டில் விமானிகள் பேசியது, விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும், அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகியவை அதில்தான் பதிவாகியிருக்கும்.












Click it and Unblock the Notifications