இன்னொரு நிறுவனம் மூலம் ஐபிஎல் அணியை வாங்க முயன்ற பவார்!
புனேவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான சிட்டி கார்ப்பரேசனில் சரத் பவார் குடும்பத்துக்கு 33.6 லட்சம் பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ரூ. 1,176 கோடிக்கு ஐபிஎல் அணியை வாங்க ஏலத்தில் பங்கேற்றது.
இந்த நிறுவனத்தின் சரத் பவார் குடும்பம் மற்ற இரண்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்துள்ளது. சரத் பவார், அவரது மனைவி பிரதீபா, மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே ஆகியோருக்குச் சொந்தமான லேப் பைனான்ஸ் அண்ட் கன்சல்டன்சி மற்றும் நம்ரதா பிலிம் எண்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்கள் தான் இந்த சிட்டி காப்பரேசன் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகளை வாங்கியுள்ளன.
புனே ஐபிஎல் அணிகளை வாங்க இந்த சிட்டி கார்ப்பரேசன் நிறுவனம் போட்டியிட்டது. ஆனால், சஹாரா நிறுவனம் ரூ. 1,720 கோடியைத் தந்து புனே அணியை வாங்கியதால், இந்த நிறுவனம் ஏலத்தில் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் ஏல விவகாரத்தில் சரத் பவாரின் குடும்பத்தின் பெயர் அடிபட்டபோது, தங்களுக்கும் ஏலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரது மகள் சுப்ரியா கூறியது குறிப்பிடத்தக்கது. அதே போல தனது மனசாட்சி மிக சுத்தமாக இருப்பதாகவும், ஐபிஎல் ஏலத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சரத் பவாரும் கூறியிருந்தார்.
ஆனால், சிட்டி கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் மறைமுகமாக ஐபிஎல் அணியை வாங்க சரத் பவார் முயன்ற விவகாரம் இப்போது வெளியில் வந்துவிட்டது.
இதையடுத்து இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய சரத்பவார்,
இன்று வெளியாகி உள்ள செய்திகள் புதிதல்ல. இரு மாதங்களுக்கு முன்பே வெளியான தகவல்தான். அதற்கு நான் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். அதையேதான் இப்போதும் கூறுகிறேன். எந்த ஒரு ஐபிஎல் அணியிலும் என் குடும்பத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இல்லை.
ஏலம் எடுப்பதில் முறைகேடு இருப்பதாக கருதினால், மத்திய மாநில அரசுகள் உயர்மட்ட விசாணைக்கு உத்தரவிடலாம் என்றார்.