உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் தமிழ் வாழ்க போர்டு வைக்க ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழ் வாழ்க மின்னொளிப் பலகையை வைக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக துணை-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் 26.4.2010 அன்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறைக்கான அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார்.
அதில் ஒரு அறிவிப்பாக உயர்தனி செம்மொழியாம் நம் தமிழ் மொழியை போற்றும் வகையில், உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றினுடைய அலுவலக கட்டிடங்களின் மீது தமிழ் வாழ்க என்ற சொல் பொறித்த மின்னொளிப்பலகை நிறுவப்படும்'' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலக கட்டிடங்களின் மீது தமிழ் வாழ்க' என்ற சொல் பொறித்த மின்னொளிப்பலகை (நியான் விளக்குகள்) விரைவில் நிறுவிட வேண்டுமென்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதற்கான விசாரணை நேற்று (3-ந்தேதி) ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணைகளில் தமிழ் வாழ்க என்ற சொல் பொறித்த இந்த மின்னொளிப்பலகை 12 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு குறையாததாக ஒளிரும் எழுத்துக்களை கொண்டதாக பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மின்னொளிப்பலகைகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், தத்தம் நிதியில் இருந்து அமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. மேலும், இவ்வாறு அமைக்கப்படுகின்ற மின்னொளிப் பலகைகளை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு பெறுகின்ற 27.6.2010 அன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்றும் இந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.