அரசு மதுபான கடையி்ல் தீ விபத்து - ரூ. 7 லட்சம் மது பாட்டில்கள் சாம்பல்
புளியரை: தமிழக,கேரள எல்லைப் பகுதியான புளியரையில், அரசு மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாசமாயின.
தமிழக-கேரள எல்லைபகுதியான புளியரையில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மக் கடை எண்-10886 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை இரு மாநில எல்லைபகுதியில் இருப்பதாலும், தென்மேற்கு பருவ மழை சீசன் தொடங்க உள்ளதையும் கருத்தில் கொண்டு கடந்த 2ம் தேதி ரூ.6 லட்சத்து 96ஆயிரத்து 440 ரூபாய்க்கு மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு அடுக்கப்பட்டன. மேலும் ஏற்கனவே பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களும் இங்கு ஸ்டாக் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு பணியாளர்கள் மூக்கன், ராஜ் நாராயணன் ஆகியோர் கடையை அடைத்து விட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கடையின் உள்பகுதியில் தீ கொளுத்துவிட்டு எரிவதை கண்ட ஒரூ லாரி ஓட்டுனர் அருகிலுள்ள அரசு சோதனை சாவடிக்கு சென்று கூறியுள்ளார். உடன் அவர்கள் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கூறவே அதிகாலையில் தீயணைப்பு துறையினரும், மின் துறையினர் வந்து மின் சப்ளையை துண்டித்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தை தாசில்தார் ராமையா, டாஸ்மக் மண்டல மேலாளர் கருணாகரன், இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சண்முகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், சேதமடைந்த மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.