ராஜ்யசபா தேர்தல் - மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
சென்னை தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றோடு மனுத் தாக்கல் முடிந்ததால் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
ராஜ்யசபாவுக்கு தமிழகத்திலிருந்து 6 காலியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 31ம் தேதி தொடங்கியது.
இதில் திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, செல்வகணபதி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பனும், அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கம், மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இன்று காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் மனு தாக்கல் செய்தார்.
இன்று பிற்பகலுடன் மனுத் தாக்கல் முடிவடைந்தது. இந்த 6 பேர் தவிர 3 சுயேச்சைகளும் மனுத் தாக்கல்செய்துள்ளனர். மனுக்களை திரும்ப பெற 10-ந்தேதி கடைசி நாள். சுயேச்சைகளின் மனுவை முன்மொழிந்து எந்த எம்.எல்.ஏவும் சான்றளிக்கவில்லை. இதனால், அவர்களது மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடியாகி விடும். இதையடுத்து கட்சிகளின் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
வருகிற 10ம் தேதி 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.
முன்னதாக, காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சனம் நாச்சியப்பன் தமிழக சட்ட மன்ற செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜிடம் மனு தாக்கல் செய்தார்.
நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்பட காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications