ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம்
சென்னை : ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளக் கோரி நாளை பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மணி விடுத்துள்ள அறிக்கையில்,
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 1989 ம் ஆண்டில் தமிழக ஆளுநராக இருந்த அலெக்சாண்டர், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்போது சட்டசபை தேர்தல் வந்து விட்டதால் அதைச் செய்ய முடியவில்லை.
எனவே தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சியில் மட்டுமே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்படவே இல்லை.
இந்தியாவில் அதிக அளவில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கு இடஒதுக்கீடு அவசியமாகிறது. இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த, ஜாதிவாரியாக மக்கள் தொகை எண்ணிக்கையை அறிவது அவசியம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தியுள்ளன.
எனவே, 2011 ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னையில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் அரசு பொது மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் மணி.