கிர்கிஸ்தானில் பெரும் இனக் கலவரம்-200 பேர் பலி-இந்திய மாணவர்கள் தவிப்பு
டெல்லி: பெரும் இனக் கலவரம் மூண்டுள்ள கிர்கிஸ்தானில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். அங்கு படிக்கச் சென்றுள்ள 90 இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவரிடையே பெரும் இனக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் கிர்கிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை மூண்டுள்ளது. நகரங்கள் பற்றி எரிகின்றன.
3 நாட்களாக நடந்து வரும் கலவரத்திற்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக்கலவரத்தில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் 90 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாட்டின் 2வது பெரிய நகரான ஓஷ் நகரில் இவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய மாணவர் ஒருவர் அளித்த தொலைபேசித் தகவலில், நாங்கள் ஒரு வீட்டில் அடைபட்டுள்ளோம். உணவு இல்லை, மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, பணம் கூட இல்லை. வெளியே தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் உள்ளது.
தங்களை விரைவாக இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது என்றார்.
இன்னொரு மாணவர் கூறுகையில், இந்தியத் தூதரகம் சரியான முறையில் செயல்படவில்லை. அறைகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறு மட்டும் எங்களிடம் கூறியுள்ளனர் என்றார்.
வரலாறு காணாத இனக் கலவரத்திற்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உஸ்பெக் இனத்தவர் ஆவர்.
கலவரத்தில் ஈடுபடுவோரையும், அப்பாவி மக்களைத் தாக்குவோரையும் சுட்டுக் கொல்லுமாறு இடைக்கால அதிபர் ரோஸா ஓடுன்பயேவ் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்வன்முறை மூண்டுள்ள ஓஷ் பிராந்தியத்தில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவியுள்ளதால் நாடே பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜலாலாபாத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடக்க தலைநகர் பிஷ்கெக்கிலிருந்து ஐந்து விமானங்களில் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அதிபராக இருந்த பாகியேவுக்கு எதிராக கிர்கிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பல நூறுபேர் கொல்லப்பட்னர். இதையடுத்து நாட்டைவிட்டு வெளியேறினார் பாகியேவ் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாகியேவ் பெலாரஸில் இருக்கிறார். அவர்தான் தற்போதைய வன்முறையை தூண்டி விட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அதை பாகியேவ் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications