தமிழை வழக்கு மொழியாக்குவதற்கு என்ன சிக்கல் உள்ளது?-ஜெ.
சென்னை: பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலங்களில் உள்ள ஆட்சி மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் ஏன் தயக்கம்? என்று கேட்டுளள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை ஆக்குவதில் எந்தவித சட்ட சிக்கலும் கிடையாது. இந்திய குடியரசு தலைவரின் முன்அனுமதியுடன் இந்தி மொழியையோ அல்லது மாநில அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் வேறு மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்த மாநில கவர்னர் அனுமதிக்கலாம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 348 (2)-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, ஒரு மாநிலத்தின் கவர்னர், ஆங்கிலத்தைத் தவிர, இந்தி மொழியையோ அல்லது அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியையோ, அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புகளில் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று 1963-ம் ஆண்டு ஆட்சி மொழிகள் சட்டம் பிரிவு-7ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலங்களில் உள்ள ஆட்சி மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் ஏன் தயக்கம்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியும், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாணவர் அணியின் சார்பில், கழக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் திங்கட்கிழமையன்று (ஜுன் 21) காலை 10 மணி அளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications