செம்மொழி மாநாடு: 30 தமிழ் விண்வெளி விஞ்ஞானிகள்- தமிழில் ஆய்வரங்கம்
நிலவுக்கு இந்தியா அனுப்பிய செயற்கைக் கோளான சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகமே கண்டு வியக்கும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பண்டைய கால பொருட்கள், இலக்கிய காட்சிகள் இடம் பெறுகின்றன.
பல்வேறு ஆய்வரங்கங்கள் நடைபெறவுள்ளன. அதில் விண்வெளி தொடர்பான ஆய்வரங்கம் 24ம் தேதி நடைபெறும்.
இதில் அமெரிக்காவின் நாஸா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த 30 தமிழ் விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவருமே தமிழிலேயே படித்து உலக அளவில் சாதனை படைத்து புகழ் பெற்றவர்கள். தமிழ் படித்தவர்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அறிவியல்- தொழில்நுட்பத்திலும் சாதிக்க முடியும் என்பது அறிவியல் அரங்கத்தின் மூலம் நிரூபிக்கப்படும்.
ஆய்வரங்கத்தின் விவாதங்கள் அனைத்தும் தாய்மொழி தமிழிலேயே இடம்பெறும்.
தாய்மொழியில் படித்தால்தான் அறிவியலில் சிறப்பாக சிந்திக்க முடியும். தாய்மொழியில் படித்தால்தான் சுயசிந்தனை அதிகரிக்கும்.
இந்த ஆய்வரங்கத்தை ஒட்டி விண்வெளி ஆராய்ச்சி குறித்த கண்காட்சியும் இடம் பெறும்.
சந்திரனுக்கு நாம் செயற்கைக் கோளை அனுப்பும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தாலும், விமானங்கள் தயாரிப்பதற்கு வெளிநாடுகளின் உதவியை நாம் தேடும் நிலையில் தான் உள்ளோம். இந்த நிலை மாற வேண்டும். நம் நாட்டிலேயே விமானங்கள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் விமானத் தயாரிப்பில் ஈடுபட பல நிறுவனங்கள் முன்வந்தாலும் நம்மி்ல் விமானத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. வரும் காலங்களில் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி்ஸ் படித்த மாணவர்கள் அதிக அளவில் தேவைப்படுவர். இதில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
திருவனந்தபுரத்தில் இந்த ஆண்டு இஸ்ரோ சார்பில் விண்வெளி தொடர்பான என்ஜினீயரிங் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 400 இடங்கள் உள்ளன. இந்த படிப்பிற்கு இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.