காங்கிரசில் வன்னியர்கள் புறக்கணிப்பு: ராமதாஸ் சம்மந்தி கிருஷ்ணசாமி
சென்னை: காங்கிரஸ் கட்சியில் தொடக்க காலம் முதலே வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்மந்த்தியுமான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மாமனாரான இவர், வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தலைமையில் நடந்த இந்த விழாவில் நூல்களை ராமதாஸ் வெளியிட, கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டார். பின்னர் கிருஷ்ணசாமி பேசுகையில்,
1952ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதைத் தடுத்து, காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க உதவியவர்கள் வன்னியர்கள்தான்.
வன்னியர்கள் இல்லையெனில், இன்று இங்கு காங்கிரஸ் கட்சி இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் அன்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை என்றார்.
நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, நான் செய்த பணிகளைப் பாராட்டி 3 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. ஐ.நா. சபை பொதுச் செயலர் பான்-கி-மூன், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் போன்றவர்கள் நேரில் பாராட்டினர்.
இன்று தமிழகத்தில் ஓடும் 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ் வண்டிகள் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவை. தமிழ்நாடு மட்டுமல்ல, இன்று 14 மாநிலங்களில் ஓடும் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை அமைச்சராக இருந்தபோது, நான்தான் அறிமுகம் செய்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications