சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட்ட வக்கீல்-புதிய வரலாறு படைப்பு
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்திய 14 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இக்பால், வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட எந்த தடையும் இல்லை.
தமிழில் வாதாடக் கூடாது என்று எந்த நீதிபதியும் சொல்லவில்லை. வக்கீல்கள் தாராளமாக தமிழில் வாதாடலாம் என்றார்.
இந்த நிலையில் இன்றுகாலை அவர் மூத்த நீதிபதிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நீதிபதி முருகேசனுடன் முதல் பெஞ்ச் அமர்வில் அவர்கலந்து கொண்டார்.
அப்போது திறந்த வெளி பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் தமிழில் வாதிட்டார். அவர் கூறுகையில், திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் செல்லாது என அரசு அறிவித்துள்ளது. இத்தகைய பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அரசு உத்தரவால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வருடம் நிலுவையில் உள்ள வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்றார்.
ரமேஷின் வாதத்தை நீதிபதி முருகேசன், தலைமை நீதிபதிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார். இதையடுத்து ரமேஷின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி இக்பால், இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக அறிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் வக்கீல்கள் தமிழில் வாதிடுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வக்கீல்களிடையே பிளவு:
இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று முதல் பணிக்குத் திரும்பலாம் என பார் அசோசியேஷன் முடிவு செய்தது. இதையடுத்து திமுக வக்கீல்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிக்குத் திரும்பினர். அதேபோல அரசு வக்கீல்ளும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து திமுக வக்கீல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு வக்கீல்கள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் ஊர்வலமாக சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல, தமிழ் வழக்கு மொழி தொடர்பான போராட்டக் குழுத் தலைவர் சங்கரசுப்பு தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் கூடி தொடர்ந்து புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவித்தனர்.