அப்சல் குரு கருணை மனு: 'முடிவெடுக்கவில்லை'-மத்திய அரசு
ஆனால், இதை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாபாராளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத் தீவிரவாதிகள் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக காஷ்மீர் மாநிலம் சோப்பூரைச் சேர்ந்த அப்சல் குரு கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தீவிரவாதிகளுக்கு தாக்குதல் நடத்த அனைத்து உதவிகளும் செய்து தந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விசாரணை நீதிமன்றம் 2002ம் ஆண்டு குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தது. 2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி அப்சல் குருவை தூக்கில் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந் நிலையில் குருவின் மனைவி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.
அந்த மனு மீது கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசையும், டெல்லி மாநில அரசையும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். ஆனால், மத்திய அரசு இதில் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.
இந் நிலையில் டெல்லி மாநில அரசு குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் தான் தனது கருத்தை ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியது.
ஆனால், மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்து வந்தது. இந் நிலையில் மத்திய உள்துறை குருவை தூக்கில் போட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாயின..
அந்த பரிந்துரையில், நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்கியதன் மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை அப்சல் குரு செய்துள்ளாக். அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். அவரது கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.
ஆனால், இன்று அதை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அப்சல் குரு தொடர்பாக எந்த பரிந்துரையையும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.