கேஜி காஸ்-அம்பானி சகோதரர்கள் புதிய ஒப்பந்தம்

இதனால், இயற்கை எரிவாயு பங்கீட்டில் சகோதரர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு முற்றாகத் தீர்ந்துள்ளது.
கேஜி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை பங்கிட்டுக் கொள்வதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல் நிறுவனங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஏற்கெனவே உள்ள குடும்ப ஒப்பந்தப்படி குறைந்த விலைக்கு எரிவாயு தரவேண்டும் என ஆர்என்ஆர்எல் கோரியது. ஆனால் அரசு நிர்ணயித்துள்ள புதிய விலைக்குத்தான் தரமுடியும் என்று கறாராகக் கூறியது ரிலையன்ஸ்.
இந்த விவகாரம், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. சமீபத்தில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், "நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவுக்கு அரசுதான் உரிமையாளர். எரிவாயுவை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில், அரசு விதிமுறைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும். எரிவாயுவை பகிர்ந்து கொள்வதில், அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்கனவே செய்து கொண்ட குடும்ப ஒப்பந்தம் செல்லாது. இது தொடர்பாக, இரு தரப்பும் கலந்து பேசி, 6 வாரங்களுக்குள் புதிய ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்..." என்று கூறியது.
இதைத் தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் தங்கள் பகையை மறந்து சமாதானமடைந்தனர். பழைய குடும்ப ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.
இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல், நிறுவனத்துக்கும் இடையே, மாற்றி அமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதுகுறித்து, ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஒப்பந்தப்படி, உ.பி.யில் உள்ள தாத்ரி மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட தங்களின் நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயுவை கேஜி படுகையிலிருந்து பெற அனில் அம்பானியின் நிறுவனம் மத்திய அரசை அணுக முடியும்.
'விரைவில் எரிவாயுவுக்காக அரசை அணுகும் முயற்சிகளை ஆர் என் ஆர் எல் மேற்கொள்ளும்' என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications