பெட்ரோல் விலை: பாஜக, அதிமுக ஆட்சியில் உயரவில்லையா?-திருமா
காஞ்சிபுரம்: வரும் 5ம் தேதி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை மனதில் கொண்டு தான் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகின்றன. அவர்களது ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லையா? என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் நடந்தது.
கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிக மிக முக்கியம். அப்போது தான் மக்கள் தொகை அடிப்படையில் அவர் அவருக்கு சமூக நீதி கிடைக்கும்.
ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயரும்போதும் மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வு காரணமாகத் தான் விலை உயர்வு ஏற்படுகிறது என்று கூறி வருகிறது. இதை சமாளித்து சாதாரண மக்கள் வாங்கும் சக்தியை கொண்டு வந்து விலைவாசி கட்டுபடுத்துவது அரசின் கடமை. உடனடியாக பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திருப்பபெற வேண்டும்.
வருகிற 5ம் தேதி பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர் வரும் தேர்தலை கணக்கில் கொண்டு தான் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகின்றன. அவர்களது ஆட்சியில் விலையை உயர்த்தவில்லையா?.
கோவை செம்மொழி மாநாட்டில் எங்கள் கட்சியின் சார்பில் வைத்த இரு கோரிக்கைகள் முதல் இரண்டு தீர்மானங்களாக நிறைவேற்றபட்டுள்ளன.
தமிழை இந்தியாவில் ஆட்சி மொழியாக்க வேண்டும், தமிழ் ஈழத்தில் தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகார பகிர்வு வேண்டும். இதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் செம்மொழி மாநாட்டில் முதல்வரின் பேச்சு அமைந்தது. இது தொடர்பாக முதல்வர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும்.
வரும் 7ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோழியாளத்தில் ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நினைவு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications