முலாயம், மாயாவதியால் உயிருக்கு ஆபத்து: அமர்சிங்
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர் சிங், முலாயம் சிங்கின் மகனுடனான ஏற்பட்ட மோதலையடுத்து கட்சியை விட்டு விலகினார். அரசியல் புரோக்கரான இவர் ராஷ்ட்ரீய லோக் மன்ச் என்ற கட்சியையும் தொடங்கினார்.
இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் லட்சுமணபுரியில் தனது புதிய கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்து நிருபர்களிடம் பேசிய அமர்சிங்,
எனக்கு வழங்கப்படும் சிறப்புப்படை பாதுகாப்பை விலக்கி கொள்ளுமாறு மத்திய அரசுக்கு முலாயம் சிங் யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க அவர் உள்துறை அமைச்சரும் இல்லை, பிரதமரும் இல்லை.
முதல்வர் மாயாவதியால் முலாயம் சிங்குக்கு அச்சுறுத்தல் உள்ளது. என்னைப் பொறுத்தவரை மாயாவதி, முலாயம் இருவராலும் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது.
உத்தரப் பிரதேதத்தின் கிழக்குப் பகுதியைப் பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி அலகாபாதிலிருந்து கோரக்பூருக்கு 400 கீ.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன் என்றார் அமர்சிங்.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமர்சிங் சார்ந்த ராஜ்புத் சமூகத்தினர் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களது வாக்குகளை மனதில் வைத்து இந்தக் கோரிக்கையை கிளப்பியுள்ளார் அமர்சிங்.
இவருக்கு காரணமே இல்லாமல் மத்திய கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.