பந்த்: தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை-அரசு
சென்னை: எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வெளியிட்ட அறிக்கையில்,
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திங்கள்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொது வேலைநிறுத்தத்திற்கு சில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதனால் எந்தவிதமான வன்முறையும், அசம்பாவிதமும் ஏற்படாமல் சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களான பால், குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி தங்கு தடையின்றி வழங்கப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
பணிக்கு வந்த சதவீத ஊழியர்கள்:
தலைமைச் செயலகத்தில் 99 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வழக்கம்போல் இயங்கின.
மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசு கட்டடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகள் முழுமையாக இயங்கின. தனியார் பேருந்துகள், கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் எவ்வித தடையுமின்றி இயங்கின.
ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்களால் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தாலும், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.
மாநிலத்தில் சில மாவட்டங்களில் ஆங்காங்கே கடைகள், தொழிற்கூடங்கள் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்திக் கூடங்கள் வழக்கம்போல் இயங்கின.
மாநிலத்தில் சில இடங்களில் ரயில் மறியல், பேருந்து மறியல், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமலும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.