இணையத்தளத்தில் ரயில் டிக்கெட் புக்கிங்: ஏஜெண்டுகளுக்கு கட்டுப்பாடு- ஏதாவது பயன் இருக்குமா?
சென்னை: ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத் தளத்தில் காலை 8 மணி முதல் 9 மணி வரை தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய இந்தியன் உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையத் தளத்தில் (http://www.irctc.co.in/) புக்கிங் செய்யப்படுகிறது.
ஆனால், இதில் பெரும்பாலான டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி. ரயில் டிக்கெட் விற்பனை ஏஜெண்டுகளே முடக்கி விடுவதால் பொது மக்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
குறிப்பாக தட்கல் டிக்கெட்டுகளை இவர்கள் பெருமளவில் மொத்தமாக வாங்கி, கூடுதல் விலை வைத்து விற்று வருகின்றனர்.
இதையடுத்து காலை 8 மணி முதல் 9 மணி வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் அதன் ஏஜெண்டுகள் டிக்கெட் எடுத்து விற்பதற்கு தடை விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதேபோலவே 90 நாட்களுக்கு முன் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாளிலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளத்தில் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை ஒருமணி நேரம் ஏஜெண்டுகளுக்கு டிக்கெட் முன்பதிவை தடை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கவுண்ட்டர்களில் தங்களது ஆட்களை குவித்து டிக்கெட்டுகளை மொத்தமாக சுருட்டும் இந்த ஏஜெண்டுகளை தடுக்காத வரை, அவர்களுடன் கூட்டு சேர்ந்து தி்ல்லுமுல்லு செய்யும் சில ரயில்வே ஊழியர்களை கட்டுப்படுத்தாத வரை ரயில்வேயின் எந்த முயற்சியும் மக்களுக்கு பலனளிக்கப் போவதில்லை என்பதே உண்மை.