ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம்
ராஜமுந்திரி: கட்சி மேலிடக் கட்டுப்பாட்டை மீறி ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுள்ள ஆறுதல் கூறும் யாத்திரையில் பங்கேற்ற ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அம்பாடி ராம்பாபு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரெட்டி கூறுகையில், எனது தந்தை நடத்திய மிகப் பெரிய பாதயாத்திரையின்போது 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு எனது தந்தையுடன் இணைந்து நடந்தவர் ராம்பாபு. அவர் போன்ற உண்மையான உழைப்பாளிகளால்தான் காங்கிரஸ் கட்சியால் 2 முறை ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.
அப்படிப்பட்ட ராம்பாபுவை நீக்கியிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இது என்னை மிகவும் பாதித்துள்ளது. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. என்ன நடக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.
ராம்பாபு நீக்கத்தை ரத்து செய்ய என்னால் என்ன முடியுமோ அதைச் செய்வேன் என்றார் ரெட்டி.
கடந்த ஒரு வாரமாக யாத்திரையை தொடர்ந்து வருகிறார் ரெட்டி என்பது நினைவிருக்கலாம். ஆனால் அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில் தற்போது ரெட்டியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதால் ஆந்திர மாநில காங்கிரஸ் வட்டாரம் மேலும் கலகலக்கத் தொடங்கியுள்ளது.