மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-60 பேர் பலி

சைந்தியா என்ற ரயில் நிலையத்தில் இந்த பயங்கர விபத்து நேர்ந்தது. இன்று அதிகாலை 1.54 மணியளவில் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக பாகல்பூர்-ராஞ்சி வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது.
அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த நியூ கூச்பிகார்-சியால்தா உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்றது.
காயமடைந்தவர்கள் பிர்பும் நகரில் உள்ள சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
விபத்து குறித்து தகவல் அறிய
விபத்து குறித்து தகவல் அறிய கட்டுப்பாட்டு அறைகளை கிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. அதன் விவரம் சியால்தா (033-23503535, 033-23503537), மால்டா (06436-222061), பாகல்பூர் (06412-4222433), ஜமல்பூர் (063444-3101)
பெட்டிகளை உடைத்துத 32 உடல்கள் மீட்பு
மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் சின்னாபின்னமாக சிதறிப் போயின. ஒன்றன் மீது ஒன்றாக விழுந்து அமுக்கி விட்டன. சில பெட்டிகள் ரயில் நிலையத்தில் இருந்த நடை பாலம் மீது போய் மோதி நின்றது.
கேஸ் கட்டர்கள் மூலம் பல பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்து 32 உடல்கள் வரை மீட்கப்பட்டன. படுகாயமடைந்த நிலையில் இருந்தவர்களும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டனர்.
ரத்தம் இல்லை
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் ஏற்ற போதிய அளவில் ரத்தம்இல்லாததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்து மருத்துவமனைகளிலிருந்து 175 பாட்டில் ரத்தம் கொண்டு வரப்பட்டு கொடுக்கப்பட்டது.
மேலும் டாக்டர்களும் போதிய அளவில் இல்லாததால் சிகிச்சை அளிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து டாக்டர்கள் விரைந்து சென்று சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications