விபத்திலிருந்து தப்பிய கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்
ஜலந்தர்: ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி வந்து கொண்டிருந்த ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் பஞ்சாப் அருகே விபத்தில் சிக்குவது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி வரும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் பஞ்சாப் மாநிலம் லெஹ்ரகாகா ரயில் நிலையம் அருகே வந்தபோது ஒரு பயணி அபாய சங்கிலியை இழுத்தார்.
இதையடுத்து அவசர பிரேக் போடப்பட்டு ரயிலை நிறுத்த டிரைவர் முயற்சித்தார். அப்போது ரயில் 100 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அவசர பிரேக் போடப்பட்டதால் என்ஜினுக்கு 2 பெட்டிகளுக்கு அடுத்து இருந்த பெட்டியின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் என்ஜினும், 2 பெட்டிகளும் மட்டும் தனியே சென்றுவிட்டன.
ஆனாலும் அதிர்ஷ்டவசமாக ரயில் பெட்டிகள் ஏதும் கவிழவில்லை. இதனால் விபத்தில் இருந்து இந்த ரயில் தப்பியுள்ளது.
இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்து பகுதி-ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ப.சி யோசனை:
இந் நிலையில் மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சென்றடைய பெரும் தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களின்போது ஹெலிகாப்டர்களையோ, சிறிய ரக விமானங்களையோ மீட்புப் படைகள் பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ரயில் விபத்து நடந்து சுமார் 3 மணி நேரம் கழித்தே முதல் நிவாரணக் குழு அங்கு சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது குழு 7 மணி நேரம் கழித்தே வந்து சேர்ந்தது.