கோவை-எமனுக்கு கடிதம் எழுதிவிட்டு பெயிண்டர் தற்கொலை
கோவை: கோவை கடலைக்கார சந்தைச் சேர்ந்த பெயிண்டர் சேகர். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சில மாதங்களுக்கு முன், இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் கடந்த 6 மாத காலமாக தனிமையில் இருந்த சேகர் மன உளைச்சலால், பாதிக்கப்பட்டார்.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றினர். சேகரின் பையில் ஒரு கடிதம் இருந்தது.
சேகர் எழுதியிருந்த அந்தக் கடிதத்தில், ''அனுப்புனர்-சேகர், த/பெ. ராமசாமி, பெறுனர்-எமதர்மராஜா, த/பெ எமன் அப்பா, எம தருமன் வீதி, எமனின் செல்: 000321000, மேல் உலகம். சித்திரகுப்தன் செல் நம்பர்: 944561377.
என்னை பற்றிய மேலும் விபரங்கள் அறிய மேலே எழுதப்பட்டிருக்கும் செல் நம்பர்களை தொடர்பு கொள்ளவும்'' என்று எழுதப்பட்டிருந்தது.
மன உளைச்சலால் இவ்வாறு எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்ததாகத் தெரிகிறது.
அதிகாரிகள் மீது புகார் கூறி கடவுளிடம் மனு:
இதற்கிடையே
விழுப்புரம் மாவட்டம் திருவினைநல்லூர் கிராமத்தில் கிருபாபுரிஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான குளம் பராமரிப்படாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு குளத்தை சுத்தப்படுத்தி சுற்று சுவர் கட்ட ரூ.7.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியிலிருந்து இரண்டு முறை சுற்று சுவர் கட்டப்பட்டும் அது தரமற்றதாக இருந்ததால் இடிந்து விழுந்து விட்டது. இதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கண்டன பேரணி நடந்தது.
200 பேர் கலந்து கொண்ட இந்த பேரணி முடிந்ததும், கிருபாபுரிஸ்வரர் கோவிலில் உள்ள சிலை முன் கோவிலை சுவரை தரமானதாக மீண்டும் அதிகாரிகள் கட்ட வேண்டும் என்றும், கடவுள் கண் திறந்து ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோவிலில் மனு வைக்கப்பட்டது.