கேரள பட்டாசு ஆலையில் விபத்து : 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு முட்டகாவு பகுதியை சேர்ந்தவர் நஜீப். இவர் வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் இவரது உறவினர் சுனிதா, மற்றும் சிவகாசியை சேர்ந்த மூர்த்தி, மூர்த்தியின் தாய் மிக்கேலம்மாள், இன்னாசிமுத்து, ஏசுதாஸ், மிக்கேல்ராஜ், விருதுநகரை சேர்ந்த முருகன், சூசி உள்பட 10 பேர் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் அனைவரும் பணியை முடித்து விட்டு சாப்பிடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிக்க தொடங்கியது.
சிறிது நேரத்தில் அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கரமாக வெடித்து சிதறியதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுனிதா, மூர்த்தி, மிக்கேல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஹரிபாடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயங்குளம், மாவேலிக்காரா, செங்கனூர், ஆலப்புழா ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹரிப்பாடு போலீசார் வழக்கு பதிவு செய்து நஜீப் மற்றும் அவரது சகோதரர் நவாஸ் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications