இன்னும் அவலம் அகலாத நிலையில், திமுகவைப் பாராட்டுவது வெட்கக்கேடானது-சிபிஎம் தாக்கு

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆகஸ்ட் பிரசார இயக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்தில் ராமகிருஷ்ணன் பேசுகையில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 1989ல் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிந்தசாமி, சைக்கிளில் வந்தபோது, ஸ்கூட்டர் வாங்கி கொடுத்தது கட்சி. மாவட்ட செயலாளராக, எம்.எல்.ஏ.,வாக அவரை அழகு பார்த்தது. கட்சிக் குழு தலைவராக, எம்.எல்.ஏ. வேட்பாளராக, கூட்டுறவு சங்க தலைவராக அவரை மட்டுமே நிறுத்திய கட்சிக்கு துரோகம் செய்ததால், கட்சி அவரை தூக்கி எறிந்தது.
தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த கோவிந்தசாமியின் செயலை, கட்சி எப்போதும் ஏற்றுக் கொள்ளாது. அவர் திருந்திக் கொள்ள அளித்த வாய்ப்பை அவர் தவறவிட்டார். திருந்த வலியுறுத்தியும் திருந்தவில்லை.
தி.மு.க.வுடன் தொடர்பு கொண்டிருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தி.மு.க. அரசுக்கு பாராட்டு விழா நடத்தும் அவரது முடிவை கட்சி மறுத்தது; அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவிந்தசாமி போன்ற துரோக சாமிகளுக்காக அஞ்ச மாட்டோம். விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு அவலங்கள் உள்ள நிலையில் தி.மு.க. அரசை பாராட்டுவது வெட்கக்கேடான விஷயம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் வாய்ந்த இயக்கம். இந்த பலத்தை உடைத்து யாராலும் பலவீனப்படுத்த முடியாது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலத்தை யாராலும் அழிக்க முடியாது. எந்தவித துரோகத்தையும் தாங்கும் வலிமையுடன் தயாராக உள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எம்.எல்.ஏ. எம்.பி., என்பது பதவிகள் அல்ல; அது ஒரு வேலை. அப்படித்தான் அதை வைத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் அச்சம்பளத்தை கூட கட்சியே வாங்கிக் கொள்கிறது. மரியாதையான இயக்கத்தில் இருந்து கொண்டு, மரியாதை இல்லை என வெளியேறிய கோவிந்தசாமியின் நிலை பரிதாபத்துக்கு உரியது.
பல கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் நகரம் என்பதால் மட்டுமே, தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி வழங்கி, திருப்பூருக்கு வளர்ச்சி திட்டங்களை செய்தது. ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறி உள்ளது. இது தெரியாமல், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தான்தான் கோரிக்கைகளை நிறைவேற்றியதாக கூறி வருகிறார். ஆனால், மக்களின் அடிப்படை பிரச்னைகள் பலவும் திருப்பூரில் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது
நூறு கோடி மக்களின் நலனை மட்டுமே கவனத்தில் வைத்து சிபிஎம் செயல்பட்டு வருகிறது. சிபிஎம் என்பது சன்னியாசி கட்சி அல்ல. ஆட்சிக்கு வரும் எண்ணத்தில் தான் கட்சி நடத்துகிறோம். ஆனால், யாரையும் காக்கா பிடிக்காமல், யாருடைய தயவும் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் மட்டுமே ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 244 கோடி ரூபாயை, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கியதில் இருந்தே, மக்கள் மீது மத்திய அரசின் பார்வை என்ன என்பது தெளிவாக தெரிகிறது. காஷ்மீர் பிரச்சினை தீப்பற்றி எரிகிறது. இதற்கு அரசியல் தீர்வு காணாமல், படைகளை அனுப்பி வேடிக்கை பார்க்கும் அவலத்தில் மத்திய அரசு இருந்து வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications