லே வெள்ளப் பெருக்கு-இதுவரை 150 பேர் பலி-500 பேரைக் காணவில்லை
ஸ்ரீநகர்: காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிவந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. 500 பேருக்கும் மேலானவர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லே பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கன மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் அப்பகுதி சீர்குலைந்து போயுள்ளது. நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி பலர் பலியானார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதுவரை 150 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமாக 120 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடரும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு நிலவுகிறது.
இந்த வெள்ளத்தில் சிக்கிய 27 ராணுவ வீரர்களில் 2 பேரின் உடல்கள், சியாச்சன் அருகே ஷியாக் பள்ளத்தாக்குப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவும், மழையும் தொடருவதால், லே பகுதிக்கும், பிற பகுதிகளுக்கும் இடையிலான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.