மமதாவின் நக்சல் ஆதரவு பேச்சு-நாடாளுமன்றத்தில் அமளி, ஒத்திவைப்பு
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் லால்கரில் பேசிய திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மமதா பானர்ஜி நக்சலைட்களுக்கு ஆதரவாக பேசியது இன்று நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது.
மேற்கு வங்கத்தில், நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள லால்கரில், பயங்கரவாதத்துக்கு எதிரான களம் என்ற தலைப்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவோயிஸ்ட் நக்சலைட்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் பொதுமக்களையும் பெருமளவில் வந்து கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதையடுத்து மமதாவுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்க மாநிலஅரசும் கோரியிருந்தன.
இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, நக்சல் தலைவரான ஆசாத் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்படவில்லை. மாறாக, வேண்டும் என்றே அவரைக் கொலை செய்து விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்பாவி மக்களையே கொல்கின்றனர். பாதுகாப்புப் படையினரின் உடைகளில் சென்று கொன்று குவிக்கின்றனர் என்று முழுக்க முழுக்க நக்சலைட் ஆதரவாளர் போல பேசினார்.
இந்தப் பேச்சு இன்று நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. மமதா பானர்ஜி லால்கரில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக நடத்திய பேரணி குறித்து கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என பாஜகவினர் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதனால் அவையில் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. அமளியாக இருந்தது. ராஜ்யசபாவிலும் இது எதிரொலித்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
விவாதம் கேட்கும் பாஜக
இதற்கிடையே, மமதாவின் பேச்சு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
இரு அவைகளிலும் கேள்விநேரத்தை ரத்து செய்துவிட்டு இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என அக்கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் கொல்லப்பட்டது தனக்கு துயரமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் ஒருவர் எப்படிப் பேசலாம் என்று பாஜக கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications