அரசு கேபிள் டிவி வந்தால் முதல்வருக்கு நாங்களே விழா எடுப்போம்-தா.பாண்டியன்
சென்னை: தமிழக அரசு அறிவித்தபடி, அரசு கேபிள் டிவி முறையாக செயல்பட ஆரம்பித்தால், நாங்களே முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுப்போம் என்று சவால் விட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
அரசு கேபிள் நிறுவனம் துவக்குவதாக கூறி, 300 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால், அரசு கேபிள் வரவில்லை. அரசு கேபிள் வந்தால், நாங்களே முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவோம்.
நில உச்சவரம்பு சட்டத்தின் படி, 1982ம் ஆண்டு, பட்டா வழங்கப்பட்டவர்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி, கடந்த 9ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் இயக்கம் நடத்தி வருகிறோம். இதன்படி தாராபுரத்தில் இருவரை குடியமர்த்தியுள்ளோம்.
குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டத்தை செயல்படுத்த ஏழு ஆண்டுகளாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது மிக நீண்ட காலம். இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதாகவும், அனைவருக்கும் பட்டா வழங்குவதாகவும், தேர்தல் அறிக்கையிலேயே முதல்வர் தெரிவித்துள்ளார். நான்கரை ஆண்டுகள் முடிந்தும் இதை முழுமையாக செயல்படுத்தவில்லை.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications