அரசையே மிரட்டிப் பார்க்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்-கருணாநிதி பாய்ச்சல்
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களில் சிலர் அரசையே மிரட்டிப் பார்க்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தனது காலத்தில் பணி அமர்த்தப்பட்டவர்கள் என்பதற்காக இப்போது டாஸ்மாக் ஊழியர்கள் இன்னலுக்கு ஆளாக்கப்படுவதாக தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவரது ஆட்சிக் காலத்தில் அவருக்கு உதவி செய்ய பணியிலே சேர்ந்தவர்களையே, தன் காரியம் முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தவர்தான் ஜெயலலிதா. இப்படிப்பட்டவர் டாஸ்மாக் பணியாளர்களுக்காக அறிக்கை விடுத்துள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற போதிலும், திமுக அரசு 2006-ஸி பதவியேற்ற பிறகு அவர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பாமல் தொடர்ந்து பணி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் நியமிக்கப்பட்டபோது, மேற்பார்வையாளர்களுக்கு மாதம் ரூ 2 ஆயிரமும், விற்பனையாளர்களுக்கு ரூ.ஆயிரமும் தொகுப்பூதியமாக அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
2007, 2008, 2009-ம் ஆண்டுகளில் இந்தத் தொகைகள் உயர்த்தி வழங்கப்பட்டன. அதாவது, கடந்த ஆண்டில் மேற்பார்வையாளர்களுக்கு ரூ 4 ஆயிரமும், விற்பனையாளர்களுக்கு ரூ 2 ஆயிரத்து 800-ம், மதுக்கூட உதவியாளர்களுக்கு ரூ 2 ஆயிரத்து 100-ம் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மதுபானக் கடைகளின் பணி நேரம் கடந்த அதிமுக ஆட்சியில் 16 மணி நேரமாக இருந்தது. இப்போது, 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஷிப்ட் முறையில் 8 மணி நேரமே இப்போது பணி செய்து வருகிறார்கள். சுழற்சி முறையில் வார விடுமுறையும் அளிக்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த ஆண்டுக்கு 5 நாள் பொது விடுமுறையைத் தவிர, இந்த ஆண்டு மே முதல் நாளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம் பணிபுரிவோருக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் காப்புத் தொகைக்கு அதிமுக ஆட்சியில் வட்டி ஏதும் வழங்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் இதுவரை மொத்தப் பணியாளர்களுக்கும் இதற்காக ரூ.7.57 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த முந்தைய ஊக்கத்தொகை திட்டப்படி, குறிப்பிட்ட பணியாளர்கள் மட்டுமே இந்த பயனைப் பெற்று வந்தனர். ஆனால், திமுக அரசு பதவியேற்ற பிறகு அனைத்துப் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஊக்கத்தொகையாக ரூ.33.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.
போனஸ் மற்றும் கருணைத் தொகை, குடும்ப நல நிதி ஆகியனவும் அதிமுக அரசில் வழங்கப்பட்டதை விட கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்கள் எந்த ஆட்சியில் பணியில் நியமிக்கப்பட்டார்கள் என்பதைப் பார்க்காமல் எந்த அளவுக்கு அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியுமோ, அந்த அளவுக்கு திமுக அரசில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அந்தப் பணியாளர்களில் ஒரு சிலர் மட்டும் போராட்டம் என்கிறார்கள்; வேலை நிறுத்தம் என்கிறார்கள்; அரசை மிரட்டிப் பார்க்கிறார்கள். ஏதோ பிரசாரத்தை, அதிலும் குறிப்பாக திமுக அரசை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் அந்தக் குரலோடு இணைந்துக் கொண்டு அரசைக் குதறுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.