பேச்சுவார்த்தைக்காக தமிழகம் கிளம்பியது இலங்கை மீனவர் குழு
யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை வடக்குப் பகுதியைச் சேர்ந்த 23 பேர் கொண்ட மீனவர் குழு விமானம் மூலம் இன்று திருச்சி வருகிறது.
தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கையின் வட பகுதி மீனவர் குழுவை அங்குள்ள மீனவர் சங்கங்கள் அனுப்புகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க பாதிரியார்கள் செய்துள்ளனர். இவர்களும் இந்தக் குழுவோடு வருகிறார்கள். மேலும் இலங்கை அரசின் சார்பில் இரண்டு அதிகாரிகளும் உடன் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து எந்தவித உயிர்ச்சேதமும் இல்லாமல் திரும்பிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேச முடிவானது.
அதன்படி தற்போது கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் குழு இன்று திருச்சி வழியாக ராமேஸ்வரம் வருகிறது. அங்கு 2 நாள் தங்கியிருந்து பல்வேறு மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளனர். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் செல்கின்றனர். அங்குள்ள மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துகிறார்கள்.
கடைசியாக மதுரையில், கூடி முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications