கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்-குவியும் விண்ணப்பங்கள்
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கலந்து கொள்ள இன்றைக்குள் விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் பணியில் காலியாக உள்ள 1,576 இடங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்கள் 1,077க்கு கடந்த மாதம் 21ல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாள் ஆகும். அதாவது இன்றுதான் கடைசி நாள். இதையடுத்து அதிக அளவிலானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
நெல்லையில் குவிந்த 60 ஆயிரம் விண்ணப்பங்கள்:
விஏஓ தேர்வுக்கு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நெல்லை தபால் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
நெல்லை மாவட்டம் உள்பட பல தபால் நிலையங்களில் விண்ணப்பத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடைசி நேரத்தில் விண்ணப்பம் அனுப்புபவர்களின் வசதிக்காக சிறப்பு கவுண்டர்கள் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது என்றார். நேற்று மாலை நெல்லை சந்திப்பு தபால் நிலையத்தில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications