மாற்றுத்திறனாளிகளை தரதரவென இழுத்து முரட்டுத்தனமாக நடந்த போலீஸ்!
சென்னை: நிரந்தர அரசு வேலை கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை போலீஸார் தரதரவென இழுத்தும், அவர்களுக்கு கால்களாகவும், கைகளாகவும் விளங்கும் ஊன்றுகோல்களை கீழே இழுத்துப் போட்டும் மனிதாபிமானமற்ற முறையில் போலீஸார் நடந்து கொண்டது பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விளையாட்டுத்துறையை சேர்ந்த மாற்று திறனாளி மாணவர்கள் தங்களுக்கு நிரந்தர அரசு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹால் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பியப்படி இருந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்களை அங்கிருந்து போகுமாறு போலீஸார் கூறியும், தங்களுக்கு கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவித பலனும் இல்லாததால் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என கூறினர்.
இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென போலீஸார் இழுத்துச் சென்று சாலையோரம் போட்டனர். அவர்கள் வைத்திருந்த ஊன்றுகோல்களை தூக்கி எறிந்தனர். அவர்கள் வைத்திருந்த பேனர்களை வாங்கி கிழித்துப் போட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதி வழியாக வந்த திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழிக்கு இதுகுறித்து தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர் விரைந்து வந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். பின்னர் அவர்களது கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அவர், உண்ணாவிரதத்தையும், சாலை மறியலையும் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். முதல்வரிடம் தானே நேரில் சென்று இதுகுறித்துப் பேசி முடிந்தவரை நிறைவேற்றித் தர முயற்சிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர். பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தானே பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.
பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்று திறனாளிகள் தங்களுக்கு நிரந்தர அரசு வேலை வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து இருக்கிறார்கள். நான் அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பதாக உறுதி கொடுத்து இருக்கிறேன்.
முதல்வர் கருணாநிதி அவர்களின் கோரிக்கைகளை பார்த்து விட்டு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்வார்கள். அதற்கு எவ்வளவு நாள் ஆகும் என்று சொல்ல முடியாது. பொதுவாக எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன். கோரிக்கைகளில் எதை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை நியாயமாக, நிச்சயமாக நிறைவேற்றி தருவார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் தான் மாற்று திறனாளிகளுக்கு உரிய இடம் வழங்குவதிலும், நியாயமானதை செய்வதிலும் முதலிடம் வகிக்கிறது. இந்த துறையை முதல்வர் கருணாநிதியே கையில் எடுத்துக்கொண்டு உள்ளார். அதனால் அவர்கள் என்ன கேட்டு இருக்கிறார்களோ அதை நிச்சயமாக அதை அவர் நிறைவேற்றி தருவார் என்றார்.












Click it and Unblock the Notifications