திறமை, அனுபவ அடிப்படையிலேயே டிஜிபியாக லத்திகா நியமனம்-தமிழக அரசு
சென்னை: திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகாசரண் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் இயக்குநர் டி.ஜி.பி. ஆர். நடராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், தன்னைவிட பணி மூப்பில் இளையவரான லத்திகாசரண் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் கே. ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில்,
போலீஸ் டி.ஜி.பி. பணிக்கு தகுதியான மற்ற நபர்களைப்போல் நடராஜும் பரிசீலிக்கப்பட்டார். டி.ஜி.பி. தேர்வு பட்டியலில் முதலில் இருந்த என். பாலச்சந்திரன், அடுத்து இருந்த நடராஜ் ஆகியோரும் பரிசீலிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. கே. விஜயகுமார் ஐ.பி.எஸ். மத்திய அரசுப் பணிக்குச் சென்றதால், அவருக்கு அடுத்து இருந்த லத்திகாசரண் தேர்வு செய்யப்பட்டார்.
போலீஸ் டி.ஜி.பி. நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ், தமிழக அரசாணையின்படி, சேவை, தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் லத்திகாசரண் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
போலீஸ் டி.ஜி.பி. பணி என்பது பதவி உயர்வு அடிப்படையிலான பணி அல்ல, டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து வழங்குவது (செலக்ஷன் போஸ்ட்) என்று தெதரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வருகிற வெள்ளிக்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications