பிரதமர், ப.சிதம்பரத்துடன் மமதா திடீர் சந்திப்பு-நக்சல் வேட்டை நிறுத்தப்படுமா?
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, திரினமூல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மமதா பானர்ஜி திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்ட் நக்சலைட்களுக்கு எதிரான ஆபரேஷன் கிரீன் ஹன்ட் வேட்டையை நிறுத்துமாறு மமதா கோரியதாக தெரிகிறது.
நக்சல்களுக்கு எதிரான கிரீன் ஹன்ட் வேட்டையை நிறுத்த வேண்டும் என்று மமதா பானர்ஜி தீவிரமாக பேசி வருகிறார். நக்சலைட்டுகளுக்கு ஆதரவாகவும் அவர் பேசி வருகிறார். நக்சலைட்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று திடீரென பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது உள்துறை அமைசத்சர் ப.சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் உடன் இருந்தனர்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. நக்சலைட்களிடமிருந்து எந்தவிதப் பதிலும் இல்லை என்று நேற்று காலையில்தான் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்த நிலையில் மாலையில் மமதா வந்து சந்தித்திருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மமதா மத்தியஸ்தராக செயல்பட்டார் பேசத் தயார் என நக்சலைட்கள் சமீபத்தில் அறிவித்தது நினைவிருக்கலாம். எனவே நக்சலைட்கள் தரப்பில் அரசிடம் ஏதாவது செய்தியை மமதா கொண்டு வந்து சேர்ப்பித்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.