அன்னை தெரசா சிறப்பு நாணயம் வெளியீடு!
உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு, சேவைகள், மக்களுக்கு அவர் விடுத்த தகவல்கள் ஆகியவற்றை விளக்கி சிறப்பு கண்காட்சி ரெயில் ஒன்று நாடு முழுவதும் புறப்படுகிறது.
6 மாத காலம் நாட்டை வலம் வர இருக்கும் இந்த ரெயிலை, அன்னை வாழ்ந்த இடமான கொல்கத்தாவில் மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "அன்னை தெரசா வெளிநாட்டில் பிறந்தவராக இருந்தாலும், ஏழைகள், பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்த ஆதரவற்றவர்கள், கணவர்கள் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் ஆகியோரை ஆதரித்து, அவர்களுக்காகவே சவைகள் செய்து வாழ்ந்தவர். தனது சேவை மூலம் இந்திய மக்களின் இதயங்களை வென்றவர்.
அன்பு என்றால் அன்னை தெரசா என்று உலகம் முழுவதும் புகழ் பெற்று, அன்பின் சின்னமாக திகழ்ந்த தாய் அவர்.
அவர் தனது புகழ் மிக்க சேவைகளை நமது கொல்கத்தாவில் இருந்து தொடங்கினார் என்பது நமக்கெல்லாம் பெருமை.
அவரது நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் மத்திய அரசு அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை விரைவில் வெளியிடும். அன்னை தெரசா நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோருடன் பேசியுள்ளேன்..." என்றார்.
சோனியா சிறப்பு செய்தி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், "அன்னை தெரசாவின் புகழை இந்த கண்காட்சி சிறப்பு ரெயில் நாடு முழுவதும் எடுத்துச் செல்லும்'' என்று தெரிவித்திருந்தார்.
அன்னை தெரசா நிறுவிய 'மிஷனரி ஆப் சேரிட்டி' அமைப்பின் தலைவர் சகோதரி பிரேமா, சகோதரிகள் நிர்மலா, ஆன்சி, ஜோசப், ஜெரார்டு ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
மத்திய மாநில அமைச்சர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.