இருதய ஆபரேஷனுக்கு பணமின்றி பரிதவிக்கும் ஏழைச் சிறுவன்: அரசின் கருணையை எதிர்பார்க்கும் குடும்பம்
ஆலங்குளம்: இருதய அறுவை சிகிச்சைக்கு போதிய பணவசதியின்றி ஏழைச் சிறுவன் ஒருவன் தவித்து வருகிறான்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா உக்கிரன்கோட்டை அருகேயுள்ள குக்கிராமம் காடுவெட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த கொல்லப்பட்டறை தொழிலாளி காளியப்பன்.
இவருக்கு 2 பெண், 2 ஆண் குழந்தைகள். இவரது மனைவி பேச்சியம்மாள். சத்துணவு உதவியாளர். இவர்கள 4வது மகன் மாயா கிருஷ்ணன். அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுக்கு சிறுவயதில் இருந்தே அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.
போதிய படிப்பறிவு இல்லாத பெற்றோர் சாதாரண நோய் என்று விட்டு விட்டனர். ஆனால் சிறுவன் கடந்த மாதம் பள்ளியில் திடீரென்று மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தான் இவனது இதயத்தில் ஓட்டை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
பல்வேறு பெரிய மருத்துவமனைகளில் பரிசோதித்ததில் சுமார் ரூ. 3 லட்சம் வரை செலவாகும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சென்னையில் உள்ள பிரபல குழந்தைகள் மருத்துவமனை இவனுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது.
அதே சமயம் சுமார் ரூ. இரண்டரை லட்சம் செலவாகும் என்றும், அதில் பாதித் தொகையை மருத்துவக் காப்பீடு மூலம் சரி செய்து விடலாம், மீதி தொகையை நீ்ங்கள்தான் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம் இச்சிறுவனின் உயிரை காக்க போதிய பணவசதியின்றி கண்ணீரில் தத்தளிக்கிறது. அரசு ஆதரவு கரம் நீட்டுமா, இச்சிறுவனை காக்குமா? தாராள மனம் படைத்தவர்களும் இந்த சிறுவனுக்கு உதவலாம்.












Click it and Unblock the Notifications