என் மீதான பழி உணர்ச்சியால் மார்ச்சுவரியைக் கூட மூடியுள்ளது திமுக அரசு-ஜெ.
சென்னை: என் மீதான பழி உணர்ச்சியால் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனா மரத்தூர் ஊராட்சியில் பிரேதப் பரிசோதனை அறையை மூடி வைத்துள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து கொடநாட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது ஜமுனா மரத்தூர் ஊராட்சி ஒன்றியம். இங்கு வாழும் மக்கள் அடிப்படை வசதி இன்றி தவிக்கின்றனர். இங்குள்ள சாலைகள் பெயரளவில் தான் இருக்கின்றது. மக்கள் குடிநீருக்காக அல்லல் படுகின்றனர். மின்சார வசதியின்றி ஊரே இருள் அடைந்துள்ளது. இவ்வாறு அடிக்கடி புகார்கள் வருகின்றன.
இங்கு என் ஆட்சியின்போது கட்டிய பிரேத பரிசோதனைக் கூடம் என் மீது உள்ள பழி உணர்ச்சியால் திறக்கப்படாமல் பாழடைந்து கிடக்கிறது.
என் ஆட்சியில் மழை வாழ் மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு உடனுக்குடன் ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆனால் இன்று அவர்கள் ஜாதிச் சான்றிதழுக்காக போராடுகின்றனர்.
ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் நிலங்களை சில தனியார் நிறுவனங்கள் அபகரித்துள்ளன. இதில் அரசு பணம் படைத்தவர்களின் பக்கம் உள்ளது என்று மலைவாழ் மக்கள் அரசின் மீது குறை கூறுகின்றனர்.
மலைவாழ் மக்களுக்காக இதைப் பற்றி அரசிடம் விளக்கம் கேட்ட ஜமுனா மரத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான என். வெள்ளையன் மீது காவல்துறை பொய்யான ஒரு வழக்கை ஜோடித்துள்ளது.
இப்பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டி தி.மு.க. ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் தன்னுடைய எடுத்துக்கொண்டு சென்றபோது அதை தட்டிக் கேட்டகற்காக வெள்ளையன் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு இப்பகுதி மக்களுக்கு நன்மை ஒன்றும் செய்யவில்லை.
எனவே, இவற்றை எதிர்த்து அ.தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை நண்பகல் 12 மணி அளவில் ஜமுனா மரத்தூர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் கூறியுள்ளார்.