சேலம் அருகே காது, கண், கழுத்து அறுத்து சிறுமி கொடூரக் கொலை
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதை அறுத்து, கண்ணைத் தோண்டி, கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஓமலூர் அருகே உள்ள கிராமம் குப்பாண்டியூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மகள் வனிதா(10). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி வனிதா புத்தகப்பையை வீட்டில் வைத்து விட்டு விளையாட சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் தேடி வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் வனிதாவின் செருப்பு மிதந்தது. இதையடுத்து ஊர் இளைஞர்கள் சிலர் உள்ளே இறங்கி தேடிப் பார்த்தனர். ஆனால் கிணறு ஆழமாக இருந்ததால் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சங்கிலி போட்டு தேடியபோது வனிதாவின் தலை அதில் சிக்கியது.
உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தபோது வனிதா மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரது வலது கண்ணை தோண்டி எடுத்துள்ளனர். காதை அறுத்துள்ளனர். கழுத்தையும் அறுத்துள்ளனர்.
நரபலிக் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.