கேரளா-விஷக் கள் குடித்த 19 பேர் பலி: 5 பேர் தமிழ்நாட்டவர்

வடக்கு மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் மாலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள சேரண்ணூர் பகுதியில் கள்ளு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 5 தேதி இரவு 7 மணிக்கு சிலர் குடித்து விட்டு ரயில் நிலைய பிளாட்பாரத்துக்கு சென்றனர்.
அங்கு அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவர்களை பெருந்தல்மன்னா மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை வரை 19 ஆக இருந்தது.
இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். அவர்களில் தனசேகரன், நிதி ஆகியோரை தவிர மேலும் இறந்த மற்றவர்கள் அடையாளம் தெரியவில்லை.
இவர்கள தவிர பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுப்பிரமணியன், பாலன், ஜான் மோகன்தாஸ், நவாஸ், சாத்துக்குட்டி ஆகியோரும் பலியாகினர். மேலும் விஷக் கள் குடித்ததால் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் பாலன், தாமிக்குட்டி, கோபாலன், அன்வர் மற்றும் கணக்கராயி ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்
கள்ளுடன் அபாயகரமான வேதிப் பொருள் கலக்கப்பட்டதே இந்த சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த உயிரிழப்பால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குற்றிப்புரத்தில் உள்ள இரண்டு கள்ளுக் கடைகளை தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கடைகளை நடத்த கான்டிராக்ட் எடுத்திருந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிட்டுள்ளார்.மேலும், விஷக் கள்ளை விநியோகித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் தரப்படும் எனவும் அறிவித்துள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications