டிஜிபி பதவி: தமிழக அரசு உண்மைகளை மறைக்கிறது-விஜயக்குமார் புகார்

தமிழக டி.ஜி.பியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்புத் துறை இயக்குனர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்னை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு உள்துறை முதன்மைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், டி.ஜி.பி. பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்.பாலச்சந்திரன், லத்திகா சரண், நடராஜ், விஜயகுமார் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டதால், மற்ற 3 பேரில் ஒருவர் டி.ஜி.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
திறமை மற்றும் தகுதி அடிப்படையில்தான் லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையில்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு விஜயக்குமார் ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் உள்துறை முதன்மைச் செயலாளர் உயர்நீதிமன்றத்திடம் உண்மையை மறைத்துப் பதிலளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜயக்குமாரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான், 1975ல் ஐ.பி.எஸ். அதிகாரியானேன். மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 21-5-2009 அன்று டி.ஜி.பி. (சட்டம், ஒழுங்கு) பதவி உயர்வுக்கான பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருந்தது. நான், தற்போது தமிழ்நாடு டி.ஜி.பியாக இருந்து வரும் லத்திகா சரணைவிட சீனியர் ஆவேன்.
டி.ஜி.பி. பதவிக்காக, பதவி உயர்வு அடிப்படையில் என்னை முறையாக பரிசீலித்திருக்க வேண்டும். அப்படி பரிசீலிக்கப்படுவதற்கு எனக்கு உரிமை உள்ளது.
நான் திறமையாக பணியாற்றியவன். வீரதீர செயலுக்காக ஜனாதிபதி விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்ற ஒரே தமிழக போலீஸ் அதிகாரி நான்தான். டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் முதல் மூன்று போலீஸ் அதிகாரிகளின் நானும் ஒருவன். டி.ஜி.பி. பதவிக்காக என்னை பரிசீலித்தார்களா என்று தெரியவில்லை.
தமிழக உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். மாநில பணிக்கு வர விரும்பவில்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. மாநில அரசு பணிக்கு நான் வர விரும்பவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்திருப்பது தவறு.
நான், மத்திய அரசு பணிக்கு போயிருந்தாலும், என்னையும் டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஒரு அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு டெபுடேஷனில் போனால் அவர் மீண்டும் மாநில அரசுப் பணிக்கு வர மாட்டார் என்று அர்த்தம் கிடையாது. அவருக்கு மாநில அரசுப் பணி பிடிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.
அப்படியே டி.ஜி.பி. பதவி கொடுப்பதாக இருந்தால், மத்திய அரசுப் பணியில் இருந்து மாநில அரசுப் பணிக்கு கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். 2001ம் ஆண்டு இதுபோல நடந்துள்ளது.
என்னை அவமதித்துள்ளனர்:
உயர்நீதிமன்றத்தில், உள்துறை முதன்மை செயலர் உண்மையான தகவலை தெரிவிக்கவில்லை. நான் தகவல்களை மறைத்தேன் என சொல்லி இருப்பது எனக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல உள்ளது. நான் எந்த தகவலையும் மறைக்கவில்லை.
நடராஜுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்:
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, டி.ஜி.பி. பதவிக்கான தேர்வு நடைபெறவில்லை. டி.ஜி.பி. நியமனத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. என்னைவிட, மனுதாரர் (டி.ஜி.பி. நடராஜ்) சீனியர் ஆவார். லத்திகா சரணை டி.ஜி.பி.யாக நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரரின் நிலைப்பாட்டிற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
டி.ஜி.பி. பதவி உயர்வு மற்றும் தேர்வு தொடர்பான நடைமுறைகளில் அநீதியை இழைக்கும் நோக்கில் உள்துறை முதன்மை செயலர்தான், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரிகளை திசை திருப்பி இருக்கக்கூடும். அதேபோல உயர்நீதிமன்றத்தையும் அவர்தான் திசை திருப்பியுள்ளார். அரசையும் அவர் திசை திருப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் விஜயக்குமார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்த விஜய்குமார், பின்னர் ஜெயலலிதா முதல்வரானபோது அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக அதிகாரி என்பதால் இவர் மீது அதிமுக ஆதரவு அதிகாரி என்ற பெயர் உண்டு.
அதே நேரத்தில் ராஜிவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது ராகுல் காந்திக்கும் நெருக்கமானார் இவர். இப்போதும் இவர் மீது ராகுலுக்கு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications