பன்றிக் காய்ச்சல்-புதுவையில் கர்ப்பிணி, வேலூரில் சிறுமி பலி
வேலூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. வேலூர் அருகே பள்ளிச் சிறுமி பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்தாள்.
வேலூர் அரசமரப்பேட்டையைச் சேர்ந்தவர் அக்ஷயஸ்ரீ (4). இவள் பிஷப் டேவிட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். சில நாட்களுக்கு முன் மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்தாள்.
இதையடுத்து அக்ஷ்யஸ்ரீ படித்து வந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு படித்து வரும் மாணவ, மாணவியருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
புதுவையில் கர்ப்பிணி சாவு:
இந் நிலையில் புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி இறந்தார்.
முதலியார்பேட்டையைச் சேர்ந்த சுஜாதா (33) பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உயர் சிகிச்சைக்காக மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.