காஷ்மீர்ப் பிரச்சினையை சரி செய்ய உமர் அப்துல்லாவுக்கு ஆதரவும், அவகாசமும் தேவை-ராகுல்
கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது...
காஷ்மீர் மிகக் கடுமையான, உணர்ச்சிகரமான பிரச்சினை. காஷ்மீரை நிர்வகிப்பதும் லேசுப்பட்ட காரியமல்ல. உமர் அப்துல்லாவுக்கு போதுமான அவகாசமும், நிறைய ஆதரவும் தரப்பட வேண்டும். அதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசு உமர் அப்துல்லாவுக்கு ஆதரவை வழங்கி வருகிறது. உமர் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர். அவர்தான் ஜம்மு காஷ்மீரை ஆள வேண்டும் என அவரது கட்சி தீர்மானித்து அவருக்கு முதல்வர் பதவியை வழங்கியுள்ளது. உமர் அப்துல்லா இளைஞர். காஷ்மீரை கையாளுவது மிகக் கடினமானது. எனவே இது சற்று கடினமான வேலைதான், அந்த வேலையை செய்து வரும் உமருக்கு அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் அனைவரும் அளிக்க வேண்டும்.
காஷ்மீரை முதலில் முழுமையாக, விரிவாக புரிந்து கொள்ள உமருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். காஷ்மீர் மாநிலப் பிரச்சினை என்பது ஏதோ பார்ட் டைம் ஜாப் போல அல்ல என்றார் ராகுல் காந்தி.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், அரசியல் இல்லாத இடமே இல்லை. உங்களது சட்டையில் உள்ளது, ஏன் பேன்ட்டில் கூடத்தான் உள்ளது என்றார் புன்னகையுடன்.
ராகுலுக்கு தேங்க்ஸ்-உமர் அப்துல்லா:
ராகுல் காந்தி தனக்காக குரல் கொடுத்திருப்பது பெருமை தருகிறது, மிகவும் நன்றிகடன் பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் உமர் அப்துல்லா.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தியின் ஆதரவு பெருமை தருகிறது, மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இருப்பினும் இந்த நன்றியை நான் ராகுலிடம் நேரடியாக கூறப் போகிறேன் என்றார் உமர்.